சமூக வலைதளங்களை மோடி சர்க்கார் பயன்படுத்துவது சட்டவிரோதம்: கோவிந்தாச்சார்யா அதிரடி!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோவிந்தாச்சார்யா ஒரு பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளார். வெளிநாட்டு சர்வர்களில் இயங்கக் கூடிய சமூக வலைதளங்களை மோடி அரசு பயன்படுத்துவது என்பது நாட்டின் பொது ஆவணங்கள் சட்டத்தை மீறிய செயல் என்று அதில் கோவிந்தாச்சார்யா கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் பிடி அகமது மற்றும் சித்தார் மிரிதுள் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் கடந்த வாரம் விசாரித்து கோவிந்தாச்சார்யாவை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கோவிந்தாச்சார்யாவின் வழக்கறிஞர் விராக் குப்தா இன்று நீதிமன்றத்தில் அந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.
அதில், மத்திய அரசின் முறையான அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஆவணத்தையும் இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்கிறது பொது ஆவண சட்டம். இதனால் அரசாங்கம் இ மெயில்களைப் பயன்படுத்துவது கூட சட்டப்படி தவறுதான் என்று வாதிட்டார்.
மேலும் இந்த சமூக வலைதளங்கள், இ மெயில்களின் சர்வர்கள் அனைத்தும் வெளிநாட்டில்தான் இருக்கின்றன. அப்படியான நிலையில் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எப்படி மற்ற நாடுகளுக்கு பரிமாறிக் கொள்ள முடியும்? மோடி அரசில் 19 அமைச்சகனங்கள் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளன.
5 அமைச்சகங்கள் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளது. பிரதமர் அலுவலகமும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், தேசிய இ மெயில் கொள்கை ஒன்றை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 15-ந் தேதி அனைத்து துறை செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தயார் நிலையில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications