மோடி ஒரு கசாப்புக்கடைக்காரர்.. அச்சுதானந்தன் கடும் தாக்கு
திருவனந்தபுரம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பல ஆயிரம் முஸ்லீம்களைக் கொன்றவர். அவர் ஒரு கசாப்புக்கடைக்காரர். அவர் பிரதமராகக் கூடாது என்று கேரளாவின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவனந்தபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரத்தில் ஈடுபட்டபோது இவ்வாறு விமர்சித்தார் அச்சுதானந்தன்.
அவர் கூறுகையில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மையமாக வைத்தே பாஜக தனது முழு பிரசாரத்தையும் செய்கிறது. கட்சியின் மூத்த தலைவர்களாக அத்வானி, வாஜ்பாய் போன்றவர்களை கைவிட்டு விட்டது. அதற்கு இப்போது மோடி மட்டுமே வேண்டும்.
குஜராத்தில் 3 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு மோடிதான் காரணம். அவர் ஒரு கசாப்புக்கடைக்காரர்.
இத்தொகுதியில் சசிதரூர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஹோட்டலில் அவருடைய மனைவி பிணமாக கிடந்தார். இப்பிரச்னையில் சட்ட வழிமுறைகள் இருந்த போதிலும், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இப்படிப்பட்டவர் மீண்டும் மக்களை நாடு வருகிறார். இவரை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்றார் அச்சுதானந்தன்.