மோடி ஒரு பிசாசு- மே.வங்கத்தை ரத்தக் கடலாக மாற்ற முயற்சிக்கிறார்: மமதா 'பொளேர்'
கொல்கத்தா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு பிசாசு- குஜராத்தை ரத்த ஆறாக மாற்றியதைப் போலவே மேற்கு வங்கத்தை ரத்த கடலாக மாற்ற முயற்சிக்கிறார் என்று அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, மமதா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ், மோடியை குஜராத்தின் கசாப்புகடைக்காரர் என்று சாடினார்.
இந்த நிலையில் மமதா பானர்ஜி தான் வரைந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஓவியங்கள் பற்றி தெரிவிக்கவேண்டும் என்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகளை விட கடந்த 35 மாதங்களில் மேற்கு வங்கத்தை நாசப்படுத்திவிட்டார் எனவும் மோடி கடுமையாக விமர்சித்தார்.
மேலும் வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டவிரோத வங்கதேச குடியேறிகளுக்கு மமதா பானர்ஜி சிவப்பு கம்பளம் விரிப்பதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் மோடி கூறியிருந்தார்.
மோடியின் இந்த தொடர் தாக்குதல்களுக்கு மமதாவும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் மமதா கூறியதாவது:
நாங்கள் குஜராத் மக்களை நேசிக்கிறோம். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமானோர் அங்கு மோடி ஆட்சி காலத்தில் படுகொலை செய்யப்பட்டனர். அவர் ஒரு பிசாசு.
மோடி ஒரு ஆபத்தான மனிதர். அவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இருளில் மூழ்கிவிடும். அவரைப் போன்ற கலவரக்கலை வல்லுநர்களிடம் இருந்து வளர்ச்சி பற்றிய பாடம் மேற்கு வங்கத்துக்கு தேவையில்லை.
மோடி பிரதமராவது ஒரு கெட்ட கனவைப் போன்றது. அவருக்கு ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மத்தியில் மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் நாடு சீரழிந்துவிடும்; இருளில் மூழ்கிவிடும்.
வங்க மொழி பேசினாலே வங்கதேசத்தவரா?
மேற்கு வங்க மக்களை பிற மாநில மக்களிடம் இருந்து பிரிக்க மோடி முயற்சி மேற்கொண்டு வருகிறார். வங்கதேசத்தில் இருந்து வங்காளிகளை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புவதாக கூறுகிறார் மோடி. இப்படியெல்லாம் பேசுவதற்கு மோடி யார்?
மோடி வரலாறு தெரியாமல் பேசுகிறார். வங்க மொழி பேசிவிட்டாலே அவர் வங்கதேச நாட்டவராகிவிடமாட்டார். வங்க மொழி பேசுகிற யாராக இருந்தாலும் வங்கதேசத்தவராக இந்த நாடெங்கும் முத்திரை குத்தப்படுகின்றனர். இது இனப்பாகுபாடு.
வங்க மண்ணில் நின்று கொண்டு வங்கதேச நாட்டவரை மூட்டை முடிசுக்களைக் கட்டி அனுப்பி வைப்பேன் என்று மோடி பேசுகிறார்.. இந்த வங்க மண்ணின் மக்கள் அவரை நிச்சயம் தூக்கி எறிவார்கள்.
வங்கதேசம் அண்டை நாடு. இந்த விவகாரத்தில் வங்கதேசத்துடன் மோதலை விலைக்கு வாங்க வேண்டுமா? நாம் அந்த நாட்டுடன் நட்புறவுடன் இருக்கிறோம்.
வங்கக் கடலை ரத்தக் கடலாக மாற்ற முயற்சி
மேற்கு வங்கத்தை எவராலும் பிளவுபடுத்திவிட முடியாது. வங்காளிகளையும் வங்க மொழி பேசாத மக்களையும் பிரிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹிந்துஸ்தானிகள் - வங்காளிகள் என்ற பிரிவினையை உருவாக்க மோடி முயற்சிக்கிறார்.
பீகார் மாநிலத்தவரை நாங்கள் சகோதர சகோதரிகளாகவே பார்க்கிறோம். அவர்களது சாத் பூஜைக்கு நாங்கள் விடுமுறை அளித்தவர்கள். உங்களுக்கு சாதியவாத, பிளவுவாத சிந்தனையை மேற்கு வங்கத்தில் இறக்குமதி செய்யாதீர்கள்.
குஜராத்தில் ரத்த ஆற்றை ஓடவிட்ட நீங்கள், வங்கக் கடலை ரத்தக் கடலாக மாற்ற முயற்சிக்கிறீர்கள்.. இந்த நாட்டுக்கு தலைமை வகிப்பவர்கள் அனைத்து சமூகத்தவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவராகத்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு மமதா பானர்ஜி சாடினார்.