பெங்களூரில் மோடி, மெர்க்கல்: திணறும் டிராபிக்
பெங்களூர்: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் அடுகோடியில் உள்ள பாஷ் நிறுவனத்திற்கு இன்று காலை சென்றனர்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியாவும், ஜெர்மனியும் சேர்ந்து போராடுவது என்று அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு, பேரழிவு மேலாண்மை, பாதுகாப்பு துறை, திறன் மேம்பாடு, கல்வி, வேளாண்மை, ஆராய்ச்சி, சிவில் விமான போக்குவரத்து, விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இந்தியா-ஜெர்மனி இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து மெர்க்கல் நேற்று இரவு டெல்லியில் இருந்து கிளம்பி பெங்களூர் வந்தார். மோடி இன்று காலை பெங்களூர் வந்தார். இந்நிலையில் இன்று காலை மெர்க்கலும், மோடியும் பெங்களூர் அடுகோடியில் உள்ள பாஷ் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு சென்றனர்.
அங்கு அவர்கள் நிர்வாகிகளை சந்தித்து பேசினர். மோடி, மெர்க்கல் வரவையொட்டி பெங்களூரின் பல இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கும் நாஸ்காம் கூட்டத்தில் மோடியும், மெர்க்கலும் கலந்து கொள்ள உள்ளனர். மெர்க்கல் இன்று இரவு ஜெர்மனிக்கு கிளம்பிச் செல்கிறார்.
போக்குவரத்து:
மோடி, மெர்க்கல் வருகையையொட்டி ரேஸ்கோர்ஸ் ரோடு, பேலஸ் ரோடு, டி.சவுதையா ரோடு, அலி அஸ்கர் ரோடு, பாலேகுந்த்ரி சர்க்கிள், கஸ்தூர்பா ரோடு, க்வீன்ஸ் சர்க்கிள், சித்தலிங்கையா சர்க்கிள், மல்லையா மருத்துவமனை ரோடு, ஆர்ஆர்எம்ஆர் சந்திப்பு, ரிச்மண்ட் சந்திப்பு, ரிச்மண்ட் ரோடு, சாந்திநகர் சந்திப்பு, லாங்போர்டு ரோடு, ஓசூர் ரோடு, அடுகோடி சந்திப்பு, சர்ஜாபூர் ரோடு, மடிவாலா சோதனைச் சாவடி, கோரமங்களா தண்ணீர் டேங்க், இந்திராநகர் நூறு அடி ரோடு, ஹெச்.ஏ.எல். ஏர்போர்ட், ஏ.எஸ்.சி. சென்டர், ட்ரினிட்டி சர்ச் ரோடு, ட்ரினிட்டி சந்திப்பு, எம்.ஜி. ரோடு, வெப்ஸ் சந்திப்பு, டிக்கென்சன் ரோடு, மனிபால் சென்டர், கப்பன் ரோடு, சிடிஓ சர்க்கிள், ராஜ் பவன் ரோடு, எல்.ஹெச். ரோடு, விக்டோரியா ரோடு, டிசோசா சர்க்கிள், அசோக்நகர் சிக்னல் லைட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் யாரும் இன்று வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று நகர போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications