ஓ... இதுதான் குஜராத்தின் வளர்ச்சியா..?: ஊட்டச்சத்து அறிக்கை குறித்து காங்கிரஸ் கிண்டல்
அகமதாபாத்: ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் அறிக்கை மூலம் குஜராத் முதலமைச்சர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் குஜரத்தின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் நலனுக்காக நடவடிக்கைகளை எடுத்துவரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்று குஜராத் சட்டசபையில் வாசிக்கப் பட்டது.
அதில், குஜராத்தில் வாழும் குழந்தைகளில் மூன்றில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், குஜராத் முன்னேறும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது என மோடி தரப்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இந்த அறிக்கை வெளியாகி இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், குஜராத் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்து வெளியாகியுள்ள அறிக்கை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஷகீல் அகமது தெரிவித்துள்ள கருத்துக்களாவது, ‘குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இதன்மூலம் குஜராத்தின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுந்துள்ளது.
மோடியின் மாதிரி இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காந்திநகருக்கு மிக அருகிலுள்ள அகமதாபாத் நகரிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கட்டிடம், பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது' எனப் பதிவு செய்துள்ளார்.