காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்: காங்கிரஸ் கண்டனம்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு குறித்த நரேந்திர மோடியின் பேச்சின் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஜம்முவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான மணீஷ் திவாரி தெரிவித்துள்ள கருத்து:
370ஆவது பிரிவு தேவையற்ற ஒன்று பாஜக பேசி வந்ததைக் கேட்டிருப்பீர்கள். தற்போது அவர்கள் 370வது பிரிவு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்கின்றனர்.
அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 371ஆவது பிரிவு குறித்து அவர்கள் பேசுவதை பார்க்கையில், இந்திய அரசியலமைப்பை அவர்கள் சரிவர படிக்கவில்லை என்றும், அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களில் கவனம் செலுத்த அக்கறை கொள்ளவில்லை என்ற முடிவுக்கும் வரத் தோன்றுகிறது.
அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள அந்த 2 பிரிவுகள்தான், இந்தியாவில் உள்ள பல்வேறு பிரதேசங்களை தேசிய நீரோட்டத்தில் ஒன்று சேர்த்துள்ளன.
மோடியின் பேச்சு, இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் இரட்டை வேடத்தை முழுவதும் வெளிப்படுத்தி விட்டது.
இவ்வாறு மணீஷ் திவாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications