ஊழல் குற்றச்சாட்டில் இருந்து அருண் ஜேட்லி விரைவில் மீண்டு வண்ணமயமாக ஜொலிப்பார்... பிரதமர் மோடி
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மீண்டு வந்து அருண் ஜேட்லி விரைவில் வண்ணமயமாக ஜொலிப்பார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அருண் ஜேட்லி, கடந்த 2013-ம் ஆண்டுவரை, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்தார். அப்போது, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக போலியாக பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிதி முறைகேட்டில் அப்போது தலைவர் பதவி வகித்த அருண் ஜேட்லிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நேற்று முன் தினம் பாஜக எம்.பி. கீர்த்தி ஆஸாத் வீடியோ காட்சிகளுடன் சில ஆதாரங்களை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அருண் ஜேட்லியை பதவியில் இருந்து நீக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஹவாலா மோசடி வழக்கில் இருந்து அத்வானி தன்னை குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டு வந்ததைப்போல, டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையிலிருந்து ஜேட்லி விரைவில் மீண்டு வந்து வண்ணமயாக ஜொலிப்பார் என தெரிவித்தார்.
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி எவ்வித ஆதாரமும் இன்றி போலியான, தவறான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். சுஷ்மா சுவராஜ், சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் மீண்டு வந்ததைப்போல ஜேட்லியும் மீண்டு வருவார் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்றார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசை களங்கப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி வருவதாகவும் வெங்கைய நாயுடு குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications