என்னை முடிக்க... ஆட்சியை சீர்குலைக்க தினமும் சதி.... மோடி பகீர் குற்றச்சாட்டு
புவனேஸ்வர்: தம்முடைய தலைமையிலான மத்திய அரசை சீர்குலைக்க வேண்டும் என என்.ஜி.ஓக்களும் எதிர்க்கட்சியினரும் நாள்தோறும் சதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஒடிஷாவின் பர்காரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சிலர் காலை முதல் மாலை வரை என்னுடைய அரசை விமர்சிப்பதை மட்டுமே ஒரே வேலையாக வைத்திருக்கிறார்கள். டீ விற்பனை செய்தவர் எப்படி பிரதமராகலாம்? என ஜீரணிக்க முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு (என்.ஜி.ஓக்கள்) பணம் வருகிறது. எனது தலைமையிலான அரசு அதற்கு கணக்கு கேட்கிறது. தொண்டு நிறுவனங்கள் பெற்ற நிதிக்கு கணக்கு சொல்லுங்கள் என்றால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை தாக்குகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு கணக்கு கேட்பது தவறா? அப்படி கேட்க தொடங்கியதில் இருந்து மோடியை எப்படி முடிக்கலாம், மோடியின் அரசை எப்படி கவிழ்க்கலாம்? எனது தலைமையிலான அரசை எப்படி சீர்குலைக்கலாம் என்று எப்போதும் சதி செய்கின்றனர்.
ஊழல் எனும் பிணியில் இருந்து நாட்டை விடுவிக்கவே என்னை நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுத்தீர்கள். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எனக்கு எதிராக என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு போகட்டும். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பில் இருந்து நான் விலகிச் செல்லப்போவதில்லை. நான் அந்த பணியில் இருந்து ஓய்ந்துவிடமாட்டேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications