மோடி பேச்செல்லாம் சரிதான், ஆனால் சங் பரிவாரங்களை அடக்கி வைக்க வேண்டும்- சிபிஐ
டெல்லி: இந்திய முஸ்லீம்கள் இந்த நாட்டுக்காகவே வாழ்பவர்கள், இந்த நாட்டுக்காக சாகவும் துணியக் கூடியவர்கள் என்று மோடி கூறியுள்ளது, முதல் முறையாக அவர் இந்த நாட்டின் பிரதமராக பேசியதாக கருதுகிறோம். ஆனால் இது போதாது. மாறாக, சங் பரிவார் அமைப்புகளை அவர் தட்டி வைக்க வேண்டும். மதக் கலவரங்களைத் தூண்ட முயற்சிக்கும் அவர்களிடம் அவர் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு பிரதமர் போல பேசியுள்ளார் மோடி. இது பாராட்டுக்குரியது, நல்ல விஷயமும் கூட. ஆனால் அவரது வார்த்தைகளை அவர் செயல்படுத்த வேண்டும்.
சங் பரிவார் அமைப்புகளை அவர் தட்டி வைக்க வேண்டும். மத ரீதியாக மக்களைப் பிரிக்கும் அவர்களை அவர் கண்டிக்க வேண்டும். லவ்ஜிஹாத் என்ற பெயரில் நாட்டில் பதட்டத்தை உருவாக்க நினைக்கும் அவர்களை அவர் கண்டிக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் தற்போது ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் இதை பிரசாரம் போல செய்து வருகின்றன. இதை பிரதமர் தட்டிக் கேட்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும்.
பாஜக தலைவர் அமீத் ஷா கூட பதட்டத்தை உருவாக்கும் வகையிலான கருத்துக்களைக் கூறியுள்ளார். இது தவறானதாகும்.
அமெரிக்காவுக்கு பிரதமர் செல்லும்போது அங்கு மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் அமெரிக்காவை கையாள வேண்டும். அமெரிக்காவின் சதி வலையில் இந்தியா வீழ்ந்து விடக் கூடாது.
கடந்த பல வருடமாக செயல்படாமல் உள்ள பழைய அணு சக்தி உலைகளை நம்மிடம் தள்ளப் பார்க்கிறது அமெரிக்கா. இதில் நாம் உஷாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் நாம் அமெரிக்காவிடம் ஏமாந்தது போதும் என்றார் அவர்.