பாஜக ஆட்சிக்கு வந்தால் கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி
காந்திநகர்: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் குற்றம்புரிந்த எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்தபடி 15 மாநிலங்களில் உள்ள 100 இடங்களில் 3டி தொழில்நுட்பம் மூலம் மோடி நேற்று பிரசாரம் செய்து பேசியதாவது:
அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு. காங்கிரஸ் தலைவர்கள்தான் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குற்றவாளிகளை முதலில் பயன்படுத்த தொடங்கினர்.

பிறகு அக் குற்றவாளிகளே சக்திவாய்ந்த அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். அதுபோன்ற குற்றவாளிகளின் பிடியில் இருந்து அரசியல் விடுவிக்கப்பட வேண்டும்.
அரசியலை குற்றவாளிகளின் பிடியில் இருந்து விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். குற்றம்புரிந்த அனைத்து எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்பு நீதிமன்றங்களை ஓராண்டில் அமைப்பேன். அதன்பிறகு அவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
பின்னர் ஊராட்சி அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதுபோன்று 5 ஆண்டுகளில் நடவடிக்கைகளை எடுத்து, அரசியலை குற்றவாளிகளின் பிடியில் இருந்து நான் விடுவிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். பாஜகவினராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications