பாதல் குடும்பத்தினருக்குச் சொந்தமான பஸ்சில் நடந்த பாலியல் அக்கிரமம்.. மாயாவதி குமுறல்
டெல்லி: பஞ்சாப் மாநிலம் மோகா என்ற இடத்தில் ஓடும் பஸ்ஸில் 14 வயது சிறுமி பலாத்காரம் செய்ய நடந்த விவகாரத்தில் தொடர்புடைய பேருந்தானது, முதல்வர் பாதல் குடும்பத்திற்குச் சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவத்தின்போது தன்னைக் காக்க பஸ்சிலிருந்து குதித்த அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாயார் படுகாயமடைந்தார். புதன்கிழமை மாலையில் இந்த அக்கிரமச் சம்பவம் நடந்தது. பஸ் கண்டக்டரும், சில இளைஞர்களும் சேர்ந்து கொண்டு அந்த சிறுமியை சீரழிக்க முயன்றனர். இதையடுத்து தனது தாயாருடன் ஓடும் பஸ்சிலிருந்து அச்சிறுமி குதித்தார். இதில் அவர் உயிரிழந்தார். தாயார் படுகாயமடைந்தார்.

டெல்லியில் இளம் பெண் ஓடும் பேருந்தில் மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது உடல் உள் உறுப்புகள் எல்லாம் சிதையும் அளவுக்கு வெறித்தனமாக நடந்த சம்பவத்தின் மறு பதிப்பு போல இந்த சம்பவம் நடந்திருப்பதை அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அந்த சிறுமி பஸ்சிலிருந்து குதித்தபோது பஸ் டிரைவர் வேண்டும் என்றே பஸ்சை அதி வேகமாக ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. பஸ்சில் இருந்த சில பயணிகளும் கூட இவர்களுக்கு உதவ முன்வரவில்லையாம்.
இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பேருந்தே பாதல் குடும்பத்திற்குச் சொந்தமானது என்று மாயாவதி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மோகா பலாத்கார வழக்கை மிகத் தீவிரமாக விசாரிக்க வேண்டும். பஞ்சாப் அரசு இந்த வழக்கை தீவிரமாக விசாரி்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. காரணம் இந்தப் பேருந்தே பாதல் குடும்பத்தினருக்குச் சொந்தமானதுதான்.
இந்த சம்பவம் மிகவும் வலியைத் தருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை பேரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதை பாதல் அரசு செய்ய வேண்டும்.
தாயும், மகளும் பலாத்காரம் செய்யப்பட்டு பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையும் விசாரிக்க வேண்டும். பஸ்சின் டிரைவர் உள்பட பஸ்சில் இருந்த யாருமே அந்தப் பெண்ணுக்கும், தாயாருக்கும் உதவ முன்வராதது வேதனை தருகிறது. இது மிகவும் கவலைக்குரியது என்றார் மாயாவதி.












Click it and Unblock the Notifications