ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதி 6 வயது சிறுவன் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு பாதுகாப்புக்காக சென்ற கார், பைக் மீது மோதியதில் 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் முகாம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ்.-ன் 35 சார்பு இயக்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். லோக்சபா தேர்தலுக்குப் பின் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்-ன் முதலாவது முக்கிய கூட்டம் இது.

இதில் பங்கேற்றுவிட்டு ஹர்சோலி முண்டாவர் சாலையில் மோகன் பகவத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோகன் பகவத்தின் பாதுகாப்புக்காக சென்ற கார் அப்பகுதியைச் சேர்ந்த சேத்ராம் யாதவ் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் யாதவின் பேரனான 6-வயது சிறுவன் உயிரிழந்தார். யாதவ் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மே மாதம் நாக்பூரில் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மாடு மீது மோதாமல் இருக்க திருப்பிய போது விபத்தில் சிக்கியது. இதில் சி.எஸ்.ஐ.எப். வீரர் படுகாயமடைந்திருந்தார்.












Click it and Unblock the Notifications