2ஜி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆறே மாதங்களில் தீர்ப்பு வரலாம்: சு.சாமி ஆரூடம்
டெல்லி: இன்னும் ஆறு மாதங்களில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோருக்கு எதிராக, 2ஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: வழக்கின் போக்கு திருப்தியளிக்கிறது. நாட்டுக்கு சொந்தமான பணத்தை தனி நபர்கள் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க கூடாது. அமலாக்கபிரிவு நன்கு தயாரித்த குற்றப்பத்திரிகையாக இதை பார்க்கிறேன் என்றார்.
இந்த குற்றப்பத்திரிகையிலுள்ள அம்சங்கள்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 3 முதல் 7 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம். இதைவிட கூடுதல் தண்டனை கிடைக்க குற்றப்பத்திரிகையை கடுமையாக்க முடியாதா என்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் கேள்விக்கு பதிலளித்த சுவாமி "கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கப்பிரிவுக்கு தடை எதுவும் கிடையாது.
உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் உள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும்போது, குற்றவாளிகளுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்குள் தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது" என்றார்.