மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்ததால் மகனை கொன்று தாயும் தற்கொலை!
மைசூரு: மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்ததால் குடும்பத்துக்கு ஆகாது என்று கூறி மாமியார் வீட்டினர் கொடுமை படுத்தியதால் 2 வயது குழந்தையை ஏரியில் தள்ளி கொன்ற தாய் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூரு அருகே நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள சிக்கபீசனஹள்ளியில் வசித்து வருபவர் மஞ்சு. இவருக்கும் லீலாவதி (22) என்ற பெண்ணுக்குமிடையே 4 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், லீலாவதி கர்ப்பமுற்றார். குழந்தைக்காக காத்திருந்த இரு குடும்பத்தாரும் இதைக்கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 2 வருடங்களுக்கு முன்பு லீலாவதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆண் குழந்தை பிறந்ததால் மஞ்சு குடும்பத்தார் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த குழந்தைக்கு ராகுல் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு பிறகுதான் குழந்தை மூல நட்சத்திரத்தில் பிறந்தது தெரியவந்தது.
இதனால் மஞ்சுவின் தந்தை, தாய் மற்றும் அவரின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர். மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்த குடும்பம் நிர்மூலமாகிவிடும் என்ற நம்பிக்கை கர்நாடகாவின் பல குடும்பங்களில் பெருகி காணப்படுவதால் இந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், அதற்கு குழந்தை பிறந்த நேரம் சரியில்லாததுதான் காரணம் என்று மஞ்சுவின் குடும்பத்தார் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
மூல நட்சத்திர நேரத்தில் குழந்தையை பெற்றதாக கூறி லீலாவதி மீதும் கரித்துக் கொட்ட ஆரம்பித்துள்ளனர் மஞ்சுவின் குடும்பத்தார். இதுகுறித்து கணவரிடம் சொல்லியும், அவர் மனைவியின் வருத்தத்தை கண்டுகொள்ளவில்லை.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட லீலாவதி, குழந்தையுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இன்று அதிகாகாலையிலே யாருக்கும் தெரியாமல் ராகுலுடன் வீட்டை விட்டு கிளம்பிய லீலாவதி, ஊருக்கு வெளியே உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். முதலில் ராகுலை ஏரியில் தூக்கி வீசியுள்ளார். இதன்பிறகு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் குடும்பம் நிர்மூலமாகும் என்று குழந்தையின் தந்தை குடும்பம் நம்பியது. இப்போது உண்மையிலேயே அந்த குடும்பம் நிர்மூலமாகியுள்ளது.