தாயின் கள்ளக்காதலன் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் வலது கையை இழந்த சிறுவன்
மும்பை: மும்பையில் 30 வயது நபர் தனது காதலியின் 4 வயது மகனை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் சிறுவன் வலது கையை இழந்தார்.
மும்பை மலாட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் பைரே(30). ரியல் எஸ்டேட் ஏஜெண்ட். அதே பகுதியைச் சேர்ந்தவர் அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான அவர் கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது 4 வயது மகன் யுவராஜ் பராபுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அனிதாவுக்கும், பைரேவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அனிதாவுக்கும் வாஹியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது என்று பெஹ்ரேவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெஹ்ரே குழந்தை யுவராஜை பூங்காவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
3 மணிநேரம் சுற்றிவிட்டு பெஹ்ரே சிறுவனுடன் காலை 11 மணிக்கு உள்ளூர் ரயிலில் ஏறியுள்ளார். ரயில் ஜோகேஸ்வரி பாலத்தை நெருங்கும்போது அவர் அனிதாவுக்கு பாடம் கற்பிக்க சிறுவனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிறுவனை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
திடீர் என்று மனம் மாறிய அவர் ரயிலில் இருந்து கீழே இறங்கி குழந்தையை தள்ளிவிட்ட இடத்திற்கு சென்றார். அங்கு காயம் அடைந்து கிடந்த சிறுவனை தூக்கிக் கொண்டு சென்று ஜோகேஸ்வரியில் உள்ள தாக்கரே மருத்துவமனையில் அனுமதித்தார். அதன் பிறகு அவர் சென்றுவிட்டார். ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதில் சிறுவன் வலது கையை இழந்தார்.
அவர் தற்போது மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனை காணாமல் அவரது தாய் துடித்தார். பெஹ்ரேவை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதற்கிடையே சிறுவனை பற்றிய விவரங்கள் வாட்ஸ்ஆப் மூலம் பலருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதை பார்த்த அனிதா மருத்துவமனைக்கு வந்து தனது மகனை பார்த்தார்.
இந்த சம்பவம் பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெஹ்ரேவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications