போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது மபி அரசு!
அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கொடுத்த நெருக்கடியால் தற்போது போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய பிரதேச அரசு.
போபால்: சிமி தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய பிரதேச அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
போபால் மத்திய சிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக மபி அரசு தெரிவித்தது. ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும் 8 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதிவிசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. பாண்டே தலைமையில் இந்த நீதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.