ம.பி.யில் பாஜக அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றும் சாத்தியம்: சொல்கிறது கருத்து கணிப்பு
போபால்: லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றக் கூடும் என்று சி.என்.என்.ஐபிஎன் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக சி.என்.என்.ஐபிஎன் நடத்திய கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தின் பல்வேறு அம்சங்களை முன்வைத்து கேள்விகள் கேட்டு கணிப்புகள் பெறப்பட்டுள்ளன.
இந்த மாநிலத்தில் மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலானவற்றை பாஜகவே கைப்பற்றுமாம்.
பாஜகவுக்கு 24-28
பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 24 முதல் 28 தொகுதிகள் வரை கைப்பற்றிவிடுமாம். அதாவது பாஜகவுக்கு 52% வாக்குகள் கிடைக்குமாம்.
காங்கிரஸுக்கு 1-5
காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்கிறது. மொத்தம் காங்கிரஸ் கட்சிக்கு 28% வாக்குகள்தான் கிடைக்குமாம்.
பாஜக பக்கம் பழங்குடிகள்
இங்கு பழங்குடி இனத்தவரில் 62% பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.
காங்கிரஸ் பக்கம் இஸ்லாமியர்கள்.
அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களில் 92% பேர் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
மோடி- ராகுலுக்கு ஆதரவு எப்படி?
பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 45% பேரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக 20% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மோடியா? சிவராஜ்சிங்கா?
நாட்டின் பிரதமராக மோடியா? ம.பி. மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானா? என்ற கேள்விக்கு சிவராஜ்சிங் சவுகானுக்கு 32% பேரும், மோடிக்கு 30% பேரும் ஆதரவு என கூறியுள்ளனர்.
ஊழல்தான் பிரச்சனை..
இம்மாநிலத்தில் ஊழல்தான் முதன்மை பிரச்சனை என 23% பேரும் விலைவாசி உயர்வு பிரச்சனை என 15% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.