மெக்கா கூட்ட நெரிசலில் பலி... பிரணாப் முகர்ஜி, மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
டெல்லி : மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி 750 பேர் பலியானதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு இந்தியர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது.

ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மெக்கா அருகே உள்ள மினா நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
விழுந்தவர்கள் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத் திணறியும், கால்களில் மிதிப்பட்டும் இறந்தனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா மன்னருக்கு அனுப்பியுள்ள செய்தியில் ‘‘இந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.
சவூதி அரேபியா ஆட்சியாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்திய அரசு சார்பிலும் இந்திய மக்கள் மற்றும் என் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், விபத்தில் ஏராளமானோர் பலியானது தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
இதே போன்று குடியரசுத் துணைத் தலைவர் முகமது அன்சாரி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ ஆகியோரும் மெக்கா விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications