மோட்டார் வாகன சட்டத்தை மீறிய 'அண்ணன்' கெஜ்ரிவால்... 'ஃபைன்' கட்டிய ஆட்டோ டிரைவர்!
மும்பை: மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி மூன்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்றதாக கெஜ்ரிவாலை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலம் மாநிலமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மராட்டியத்தில் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று மும்பை வந்தார் கெஜ்ரிவால்.
விமான நிலையத்தில் இறங்கிய கெஜ்ரிவால் ஆட்டோ ஒன்றில் ஏறி 5 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்தேரி ரயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவருடன் ஆம் ஆத்மியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.

மேலும் அவரை பின்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆட்டோக்களில் சென்றனர். கெஜ்ரிவாலை ஏற்றிச் சென்றதன் மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தார் அந்த ஆட்டோ டிரைவர். ஆனால், அவரது மகிழ்ச்சி நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.
கெஜ்ரிவாலின் ஆட்டோ பயணத்தைக் கேள்விப்பட்ட மும்பை போலீசார், மோட்டார் வாகன சட்டத்தை மீறி அந்த ஆட்டோவில் மூன்றுக்கும் அதிகமானோர் பயணம் செய்ததைக் கண்டு பிடித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.
இதுபற்றி மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் காலித் கூறுகையில், ‘‘அரவிந்த் கெஜ்ரிவாலை பின்தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தை மீறி சென்ற ஆட்டோ டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் மின்சார ரயிலில் பயணம் செய்து இறங்கி சென்றபோது மெட்டல் டிடெக்டர் கருவி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. இதனால் பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என ஆம் ஆத்மி கட்சியினர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மராட்டிய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications