மும்பை ‘வெள்ளயங்கிரி’யை தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை - தந்தை, மகன் கைது
மும்பை: மும்பையில் வீட்டில் சத்தமாகப் பாட்டு பாடியதைத் தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவிமும்பை பகுதியை சேர்ந்த கிஸான்(44) என்பவர் ஹோலி பண்டிகை அன்று இரவு தன் வீட்டில் சத்தமாக பாட்டுப்பாடி கொண்டு இருந்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர் அமோல், இது தொடர்பாக கிஸானை கண்டித்துள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிஸான் மற்றும் அவரது மகன் தானாஜி இருவரும் அமோலை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர், தாங்கள் வைத்திருந்த கத்தியால் அமோலை குத்திவிட்டு இருவரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அமோலை அக்கம்பக்கத்தார் மீட்டு நவிமும்பை மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சயான் மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமோல், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கிஸான் மற்றும் அவரது மகன் தானாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.