மும்பையில் 17 வயது பெண்ணை டெம்போவில் வைத்து சீரழித்த 3 ஆட்டோ டிரைவர்கள், மர்ம நபர்
மும்பை: மும்பையில் 17 வயது இளம்பெண்ணை 3 ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் மும்பை போரிவாலி பகுதியில் உள்ள கணபத் பாட்டில் நகரில் தனியாக வசித்து வருகிறார். தாயால் கைவிடப்பட்ட அவரை அவரது ஆண் நண்பர் ஒருவர் கவனித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு சாப்பிட உணவு வாங்க கடைக்கு சென்றார்.
அப்போது அவருக்கு பழக்கமான ஆட்டோ டிரைவர் சோனு காம்ப்ளி அவரை வழிமறித்து அவரை மினி டெம்போவுக்குள் இழுத்துப் போட்டுச் சென்றார். வழியில் சோனுவின் நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் ஜெய்பிரகாஷ் பால், அஸ்லாம் கான் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை டெம்போவுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
டெம்போவுக்குள் ஏதோ நடக்கிறது என்ற சந்தேகத்தின்பேரில் வந்த ஒருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்தபோது அங்கு இருந்த ஜெய்பிரகாஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சோனு, அஸ்லாம் ஆகியோரை கைது செய்தனர். நான்காவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.