நான் யாருங்க... பிரதமர் மோடிக்கு ஆசிர்வாதம் பண்ண..... வாரணாசியில் முரளி மனோகர் ஜோஷி பேட்டி
வாரணாசி: ஆசிர்வாதம் செய்வதற்கு தான் யார் என்றும் மக்களே பிரதமர் மோடியை ஆசிர்வதித்து வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறினார்.
பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தவர். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி போட்டியிடுவதற்காக, தன்னுடைய வாரணாசி தொகுதியை விட்டுக்கொடுத்தார். அதற்கு பதிலாக கான்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். வாரணாசியில் போட்டியிட முடியாமல் போனதற்காக அப்போது முரளி மனோகர் ஜோஷி மிகவும் வருத்தப்பட்டார்.

இதனிடையே 2014ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற நிலைகுழு தலைவராக இருக்கிறார். இவரது அறிக்கைகள் பல பிரதமர் மோடிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் 2019ம் ஆண்டு பாஜக தலைமை இவருக்கு எந்த தொகுதியிலும் போட்டியிட சீட் கொடுக்கவில்லை. இதேபோல் இவரது நெருங்கிய நண்பரும், பாஜக மூத்த தலைவருமான அத்வானிக்கும் இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக வாரணாசியில் போட்டியிட்டு உள்ளார் அத்வானியின் காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிட்டு உள்ளார்.
இன்று வாரணாசி மக்களவை தொகுதியில் தேர்தல் நடந்தது. இன்று காலை தனது வாக்கினை முரளி மனோகர் ஜோஷி பதிவு செய்தார். அதன் பிறகு வெளியே வந்த அவரிடம், நீங்கள் இந்த தொகுதியில் போட்டியிடும் மோடியை ஆசிர்வாதம் செய்தீர்களா என கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், "நான் யாருங்க அவருக்கு ஆசிர்வாதம் பண்ண, பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களே ஆசிர்வாதம் பண்ணிகிட்டு இருக்காங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.












Click it and Unblock the Notifications