ராமாயண தேர்வில் மங்களூர் முஸ்லீம் மாணவி அசத்தல்.. தாலுகாவிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி
மங்களூர்: மங்களூரில் முஸ்லீம் பெண் ஒருவர் ராமாயணம் குறித்த தேர்வில் தாலுகாவிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டம் புத்தூர் தாலுகாவில் இருக்கும் சுல்லியபடவு கிராமத்தில் இருக்கும் சர்வோதயா உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் பாதிமத் ராஹிலா. அவரின் தந்தை இப்ராஹிம் அப்பகுதியில் உள்ள பேக்டரி ஒன்றில் வேலை செய்கிறார்.

ராஹிலாவுக்கு ராமாயணம், மகாபாரதம் பற்றி படிக்க வேண்டும் என ஆசை. அவருக்கு அவரது மாமா ஆதரவு அளித்தார். இதையடுத்து ராஹிலா இந்து இலக்கியத்தை படித்து வந்தார். இந்நிலையில் ராமாயணம் குறித்து நடந்த தேர்வில் ராஹிலா 93 சதவீத மதிப்பெண்கள் பெற்று புத்தூர் தாலுகாவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
ராமாயணம் குறித்த தேர்வை 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டுமே எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கோடை கால விடுமுறையின் போது மகாபாரதம் குறித்த தேர்வுக்கு படிக்கப் போவதாக ராஹிலா தெரிவித்துள்ளார்.
பாரத சன்ஸ்கிருதி பிரதிஸ்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய தேர்வில் தான் ராஹிலா 93 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கர்நாடக மாநிலத்திலேயே முதல் மாணவியாக வர நினைத்தார் ராஹிலா ஆனால் முடியவில்லை என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications