முசாபர்நகர் கிடக்குது: 5 நாடுகளுக்கு டூர் கிளம்பிய உ.பி. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்
லக்னோ: முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாடிக் கொண்டிருக்கையில் உத்தரபிரதேச அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குழு 5 நாடுகளுக்கு சுற்றுலா கிளம்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநில அமைச்சர்கள் 8 பேர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 17 பேர் கொண்ட குழு துருக்கி, நெதர்லாந்து, இங்கிலாந்து, கிரீஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா கிளம்பியுள்ளது. அந்த குழு இன்று காலை இஸ்தான்புல்லுக்கு கிளம்பிச் சென்றது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த 5 நாடுகளின் நாடாளுமன்ற யுக்திகளை கண்டறிந்து வரச் சென்றுள்ளனர்.
அவர்களின் சுற்றுலாவுக்காக சமாஜ்வாடி கட்சி அரசு ரூ.1 கோடி வழங்கியுள்ளது. அந்த குழுவுக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முசாபர்நகர் மாவட்ட பொறுப்பாளரான நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஆலம் கான் தலைமை தாங்கிச் சென்றுள்ளார். சுற்றுலா சென்றவர்களில் சர்ச்சையில் சிக்கி பதவியை ராஜினாமா செய்து மீண்டு அக்டோபரில் பதவியை பெற்ற ராஜா பைய்யாவும் அடக்கம்.
இது குறித்து ஜனதாதள தலைவர் அலி அன்வர் கூறுகையில்,
இங்கு மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இது எந்த ஒரு அரசுக்கும் அவமானமான செயல். எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் ஆனால் அவதிப்படும் மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பை மறந்துவிட வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications