மகளின் கொலைக்கு இன்போசிஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்- ரசிலாவின் தந்தை
தங்களது மகளின் கொலைக்கு இன்போசிஸ் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று புனேவில் இன்போசிஸ் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட கேரள பெண் ரசிலாவின் தந்தை ராஜூ கூறியுள்ளார்.
புனே: கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரசிலா ராஜூ. பொறியியல் பட்டப்படிப்பு படித்த ரசிலா, புனோவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
ஞாயிறன்று விடுமுறை நாள் என்றும் பாராமல் பணிக்கு சென்ற ரசிலா, சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த காவலாளியே கொன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ரசிலாவின் தந்தை ராஜூ,50, என்பவர் கேரள பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ராஜூ தனது நண்பருடன் திங்கட்கிழமை மும்பை சென்று, ரசிலாவின் உடலை கேரளா கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ரசிலாவின் உடலை பெற்றுக் கொண்டு கேரளா திரும்புவதற்கு முன், மகள் கடைசியாக தங்கியிருந்த வீடு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட இன்போசிஸ் அலுவலக அறையை பார்வையிட்டார் ராஜூ.

கண்ணுக்கு கண்ணாக வளர்த்தேன்
ரசிலாவின் உடலை பெற்றுக்கொண்ட ராஜூ மகள் கொலை செய்யப்பட்டு விட்டாள் என்பதை நம்ப முடியாதவராகவே பேசினார். பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும்போதே தாயை இழந்த ரசிலாவை கண்ணுக்கு கண்ணாக வளர்த்தேன். அவளது அண்ணன் அபுதாபிக்கு சென்றதையடுத்து, ரசிலா மீது முழு கவனம் செலுத்தி வந்தேன். அவள் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
நிர்வாகத்தின் அலட்சியம்
புனேவை சற்றும் விரும்பாத தனது மகள் இப்படி என்னை விட்டு சென்றுவிடுவாள் என்று எண்ணவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார் ராஜூ. இன்போசிஸ் நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தனது மகள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், இரவு பணிக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது நிறுவனத்தின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனம் பொறுப்பு
எனது மகளை அலுவலக காவலர் துன்புறுத்தியதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், அவளது உயர் அதிகாரிகளே அவளிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும், அங்கிருந்து பெங்களூருக்கு பணிமாற்றம் கோரிய போதும் நிர்வாகம் மறுத்துவிட்டது என்றும் அவர் கூறினார். மேலும், இன்போசிஸ் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகத் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு அந்நிறுவனம் தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் ராஜூ கூறியுள்ளார்.
நியாயம் கிடைக்க போராடுவேன்
அலுவலகத்தின் பாதுகாவலர் ஒரு பொறியியல் பட்டதாரி ஊழியரின் அறை வரை எப்படி செல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பிய ராஜூ, இதில் வேறு யாருக்கு தொடர்பிருக்கிறதா என தெரியவில்லை. இது தொடர்பாக சட்டப்படி, எனது மகளுக்கு நியாயம் கிடைக்க போராடுவேன் என்று ராஜூ தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் பேட்டி
இந்த நிமிடம் வரை தங்கள் ரசிலா கொலை செய்யப்பட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றும், உயிரோடு திரும்ப வருவாள் என்றே நினைத்துக் கொண்டிருப்பதாகவும், கோழிக்கோடுவில் இருக்கும் அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கூறுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் ரசிலாவின் தந்தைக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ரசிலா மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகவும், உடனடியாக புனேவுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கடும் அதிர்ச்சி
அதன்பிறகு தொடர்ந்து இன்போசிஸ் அதிகாரிகளை நாங்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது, எதையும் சொல்ல அவர்கள் தயாராக இல்லை. உடனடியாக புணேவில் இருக்கும் எங்கள் குடும்ப நண்பரை தொடர்பு கொண்டு ரஸிலாவுக்கு என்ன ஆனது என்று பார்க்கச் சொன்னோம். அவர் மருத்துவமனைக்குச் சென்று, ரசிலா கொலை செய்யப்பட்டது குறித்து எங்களுக்குத் தெரிவித்தார். நாங்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானோம் என்று ரசிலாவின் உறவினர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications