ஆமாய்யா.. நான் அந்த ஜாதிதான், கோத்திரம் இதுதான்.. முதல் முறையாக பகிரங்கப்படுத்திய ராகுல் காந்தி
Recommended Video
ஜெய்ப்பூர்: "நான் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிராமணன்.. எனது கோத்திரம் தத்தாத்ரேயா" என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கோயிலில், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டபோது ராகுல் காந்தி தனது கோத்திரத்தை பூஜாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தினாநாத் கவுல் என்ற பூஜாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். தலைமை பூஜாரி ராஜ்நாத் கவுலும் இதை உறுதி செய்துள்ளார். பாஜகவின் விமர்சனங்களையடுத்து, ஜாதி, கோத்திரம் விவகாரம், ராகுல் காந்தியின் விருப்பத்தோடு வெளியே சொல்லப்படுவதாக தெரிகிறது.
ராகுல் காந்தி கோத்திரம்
ராகுல்காந்தி தனது கோத்திரம் தத்தாத்ரேயா என்றும் தன்னை காஷ்மீரி பிராமணர் என்று அறிமுகம் செய்து கொண்டார் என்றும் பூஜாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மேனகா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இந்த கோவிலுக்கு வந்து பிரார்த்தனை நடத்தி உள்ளனர் என்று தினாநாத் கவுல் தெரிவித்துள்ளார்.
முன்னோர்கள்
ராகுல் காந்தியின் முன்னோர்கள் இந்த கோயிலில் வழிபட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. எனது முன்னோர்கள் அதை பூஜையை நடத்தி வைத்துள்ளனர் என்று தினாநாத் கவுல் தெரிவிக்கிறார்.
அமைதி நிலவ பிரார்த்தனை
கோவில் வருகை பதிவேட்டில் ராகுல்காந்தி எழுதி வைத்துள்ள தகவல்கள் இதுதான்: நான் ராகுல்காந்தி. ராஜீவ் காந்தியின் மகன். புஷ்கர் கோயிலுக்கு வருகை தந்து பூஜையில் பங்கேற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது குடும்ப பூஜாரி மூலமாக பூஜையை நிறைவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மற்றும் உலகத்தில் அமைதி நிலவ வேண்டும் சகோதரத்துவம் நிலைக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து கொண்டேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்து வாக்கு வங்கி
ராகுல் காந்தி இதற்கு முன்பாக ஒருமுறை, நான் சிவபெருமானின் பக்தன் என்று தெரிவித்திருந்தார். பாஜகவின் இந்து வாக்கு வங்கி அரசியலுக்கு பதிலடி அளிக்கும் நோக்கத்தில், ராகுல் காந்தி தன்னை ஒரு தீவிர இந்துவாக காட்டிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
வெளியே சொன்ன ராகுல் காந்தி
அதேநேரம், புஷ்கர் கோயில் வழிபாட்டுக்கு பிறகு, ராகுல்காந்தி அஜ்மீர் நகரில் உள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ராகுல் காந்தி தனது ஜாதி அடையாளத்தை வெளியே தெரிவித்துக் கொண்டது பாஜக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆனால், ராகுல் காந்தி இந்துக்களை ஏமாற்றவே பூணுல் அணிந்து வருகிறார் என இதுவரை பாஜக விமர்சனம் செய்து வந்தது நினைவில் இருக்கலாம்.