நாகாலாந்தில் மீண்டும் கூவத்தூர்- எம்எல்ஏக்கள் அஸ்ஸாம் ரிசார்ட்டில் அடைப்பு- மாஜி முதல்வருக்கு ஆதரவு!
நாகாலாந்து அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தம்மை ஆட்சி அமைக்க அழைக்க கோரி மாஜி முதல்வர் ஜெலியாங் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கோஹிமா: நாகலாந்தில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெலியாங் திடீரென ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தமிழகத்தின் கூவத்தூர் பாணியில் அஸ்ஸாம் மாநில ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாகாலாந்து முதல்வராக இருந்தவர் நாகா மக்கள் முன்னணியின் ஜெலியாங். கடந்த பிப்ரவரி மாதம் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு நாகா இனமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஜெலியாங் பதவி விலக நேரிட்டது.

புதிய முதல்வர்
இதையடுத்து புதிய முதல்வராக நாகா மக்கள் முன்னணியின் தலைவர் லெய்சீட்சு பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது எம்.எல்.ஏவாக இல்லை. அவரது மகன்தான் எம்.எல்.ஏவாக இருந்தார்.

ஜூலை 29-ல் தேர்தல்
லெய்சீட்சு முதல்வரானதால் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டும். இதற்காக அவரது மகன் அங்காமி-1 தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதிக்கு வரும் 29-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

கூவத்தூர் பாணி
இந்நிலையில்தான் ஆளும் நாகா மக்கள் முன்னணியில் 35 எம்.எல்.ஏக்கள், தமிழக கூவத்தூர் பாணியில் அஸ்ஸாம் மாநில ரிசார்ட் ஒன்றில் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து தாங்கள் ஜெலியாங், முதல்வராக ஆதரவு தெரிவிக்கிறோம் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர்.

அமைச்சர்கள் நீக்கம்
இதனால் கோபமடைந்த முதல்வர் லெய்சீட்சு, ஜெயிலாங், அவருக்கு ஆதரவு தந்த 4 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தார். அத்துடன் நாகா மக்கள் முன்னணியில் இருந்தும் பலரையும் நீக்கினார்.

ஆட்சி அமைக்க உரிமை கோரல்
இதனால் நாகாலாந்து அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக தமக்கு 41 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் தம்மையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவுக்கு ஜெலியாங் மனு அளித்துள்ளார்.

பாஜகவின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை
நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கு மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்களும் 8 சுயேட்சைகளும் உள்ளனர். இந்த 59 பேரின் ஆதரவை நேற்று முன்தினம் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். பாஜகவினரும் நாகாலாந்தில் 100% ஆதரவு தங்களுக்கே என மகிழ்ச்சியுடன் இருந்தது. இப்போது ஆளும் நாகா மக்கள் முன்னணியில் கலகக் குரல் எழுந்துள்ளதைத் தொடர்ந்து நிகழ்வுகளை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications