தமிழகம், புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெறும்: நக்மா நம்பிக்கை
புதுச்சேரி: தமிழகத்தில் அதிமுக, புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். எனவே மாற்றத்தை மக்கள் விரும்புவதால் காங்கிரஸ்-திமுக கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும் என்று மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா கூறினார்.
தமிழகம், கேரளா மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடையும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீயாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தமிழகம் வந்த அவர், சென்னை மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இதையடுத்து இன்று புதுச்சேரி சென்ற நக்மா, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமி நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக, புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
வெள்ள பாதிப்பின் போது தமிழகத்தில் வழங்குவதாக கூறப்பட்ட ரூ.5 ஆயிரம் தொகையைக் கூட அதிமுக அரசு முழுமையாக வழங்கவில்லை. எனவே மாற்றத்தை மக்கள் விரும்புவதால் காங்கிரஸ்-திமுக கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கடந்த தேர்தலின் போதும் வாஷிங்மெஷின் தரப்படும் என அறிவித்தார். ஆனால் தரவில்லை. தற்போது அதே வாக்குறுதியை மீண்டும அறிவித்துள்ளார். மக்களை ஏமாற்றி விடலாம் என அவர் நினைத்து செயல்படுகிறார்.
மத்திய பாஜக அரசு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கூறியது. ஆனால் இதுவரை 1 லட்சம் பேருக்கு கூட வேலை தரவில்லை. உத்தரகாண்டில் ஜனநாயகம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசு மீண்டும் மலர்ந்துள்ளது. பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளால் மீண்டும் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெறுகிறது. புதுவையில் ஒரு பெண் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் சூழலை அனுசரித்து வாய்ப்பு தந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு மேலும் பல பதவிகள் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications