ஆந்திரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!
குண்டூர்: ஆந்திரா முதல்வராக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கிறார். இதையொட்டி குண்டூரில் வரலாறு காணாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானா புதிய மாநிலம் உருவான நிலையில் ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை 6 அமைச்சர்களுடன் பதவியேற்க இருக்கிறார். விஜயவாடா- குண்டூர் இடையே அமைந்துள்ள நாகர்ஜுனா பல்கலைக்கழகம் அருகே பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5,000 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மத்திய அமைச்சர்கள், தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட 17 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து பதவியேற்பு அரங்கு வரை போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் முக்கிய பிரமுகர்கள் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து விழா அரங்கிற்கு வர வசதியாக மூன்று ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications