முகேஷ் அம்பானிக்காக எரிவாயு விலையை உயர்த்த கோரினார் மோடி: கேஜ்ரிவால் புகார்
சண்டிகர்: முகேஷ் அம்பானிக்காக எரிவாயு விலையை மூன்று முடங்க உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தவர் குஜராத் முதல்வரும் பாஜக வேட்பாளருமான நரேந்திர மோடிதான் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
சண்டிகரில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கேஜ்ரிவால் பேசியதாவது:

முகேஷ் அம்பானி என்ற ஒரு நபருக்காக இயற்கை எரிவாயு விலையை மூன்று மடங்க உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியவர் மோடி. அப்படி விலை உயர்த்தப்பட்டால் ஏழை விவசாயிகளைத்தான் பாதிக்கும். நாட்டின் பண வீக்க விகிதம் அதிகரிக்கும்.
ஆனால் முகேஷ் அம்பானி என்ற ஒருநபர் மட்டுமே பயனடைவார். மோடியும் ராகுலும் அம்பானியின் விமானத்தைத்தான் தங்களது பயணத்துக்கு பயன்படுத்துகின்றனர். அதனால் அம்பானியின் நலன்களுக்காகவே அவர்கள் சிந்திக்கின்றனர்.
நாடு முழுவதும் நான் பயணம் மேற்கொள்கிறேன்.. எனக்குத் தெரிந்த வகையில் மோடி அலை எங்கும் வீசவில்லை. மோடி அலை என்பது ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பமே..
அப்படி மோடி அலை வீசுகிறது எனில் ஏன் அவர் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்? நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்லாத காரணத்தாலேயே அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பதுதான் உண்மை.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.












Click it and Unblock the Notifications