மே 26ம் தேதி பதவியேற்கிறார் பிரதமராக நரேந்திர மோடி
டெல்லி: அமைச்சரவையில் யாரை சேர்ப்பது? யாரை கழற்றிவிடுவது என்று போராடிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி வரும் மே 26ம் தேதியன்று அமைச்சர்களுடன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்த பின் இத் தகவலை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இன்று காலை பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 15 பேர் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி.

இதை ஏற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி புதிய அரசு அமைக்க நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், எங்களது கூட்டணிக் கட்சியினர் நரேந்திர மோடி பிரதமராக கடிதங்கள் தந்தனர். அதையும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்ட கடிதத்தையும் ஜனாதிபதியிடம் தந்தோம்.
வரும் 26ம் தேதி திங்கள்கிழமை அவரும் அமைச்சரவையும் பதவியேற்பர் என்றார்.
பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வென்ற போது அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம்தான் யார் அமைச்சர்களாக வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தாம் விரும்பியபடி அமைச்சர்களை நியமிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.
ஏற்கெனவே நாளை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கக் கூடும் என்று கூறப்பட்டது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 24-ந் தேதி சனிக்கிழமையன்று மோடியும் சில கேபினட் அமைச்சர்களும் பதவியேற்கக் கூடும் என்றன பாஜக வட்டாரங்கள்.
ஆனால், வரும் 26ம் தேதி தான் பதவியேற்பு விழா நடக்கும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications