அத்வானி தொகுதியில் மோடி வாக்களிப்பு! ஆட்டோவில் வந்து ஓட்டுப் போட்ட மோடி அம்மா!!
காந்திநகர்: பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிடும் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தனது தாயாருடன் சென்று வாக்களித்தார்.
7வது கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் மோடி, சோனியா, அத்வானி, ராஜ்நாத்சிங், முரளி மனோகர்ஜோஷி, உமாபாரதி, சரத் யாதவ் உள்ளிட்டோர் முக்கிய பிரபலங்கள்.
அத்வானி போட்டியிடும் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் நரேந்திர மோடி காலையில் வாக்களித்தார். வாக்களிக்க செல்வதற்கு முன்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், அத்வானி போட்டியிடும் காந்திநகர் தொகுதியில் ஒரு வாக்காளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, இந்த ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
நிர்பயாவை மறக்காதீர்..
மேலும் வாக்களிக்கும் போது டெல்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயாவை மறந்துவிட வேண்டாம், விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களை மறந்துவிட வேண்டாம், எல்லையில் நமது வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டதை மறந்துவிட வேண்டாம் என்றும் மோடி கேட்டுக் கொண்டார்.
அம்மா- மகன் அரசை
மத்தியில் இருக்கும் அம்மா- மகன் அரசை தூக்கி எறிய வேண்டும். மே 16-ந் தேதி நல்ல தீர்ப்பு வரும். மத்தியில் பாஜக தலைமையில் வலுவான ஆட்சி அமையும் இதில் எந்த குழப்பமும் வேண்டியதில்லை என்றார் மோடி.
மொபைலில் படம் எடுத்த மோடி
அதன் பின்னர் தாம் வாக்களித்ததை தமது மொபைலில் மோடி படம் எடுத்துக் கொண்டார்.
மோடியின் தயார் ஹீராபென்
அதே காந்திநகர் தொகுதியில் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னும் வாக்களித்தார்.
ஆட்டோவில் வந்த அம்மா
ஆனால் தமது மகன் நரேந்திர மோடியின் காரில் வராமல் ஆட்டோவில் வந்துதான் ஓட்டுப் போட்டார் ஹீராபென் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்னா நேவால்..
இந்தியன் பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், ஆந்திர மாநிலம் கச்சிபோவ்லியில் காலையிலே தமது வாக்கைப் பதிவு செய்தார்.
அமரீந்தர்சிங்
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், பாட்டியாலாவில் காலையிலே வாக்களித்துவிட்டார்.
மாயாவதி
பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதியில் காலையிலே தமது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் அனைவரும் தவறமால் வாக்களிக்க வேண்டும். நாட்டில் மோடி அலை மட்டுமல்ல எந்த ஒரு அலையுமே வீசவில்லை என்றார்.
அத்வானி
குஜராத்தின் பழைய அகமதாபாத் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வாக்களித்தார்.
அமித்ஷா
காந்திநகர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அமித்ஷா வாக்களித்தார்.
ராஜ்நாத்சிங்
உ.பி.யின் லக்னோவில் ராஜ்நாத்சிங்கும் ஜான்சியில் உமாபாரதியும் வாக்களித்தனர்.
நிர்மலா சீதாராமன்
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நிர்மலா சீதாராமனுக்கு ஆந்திர மாநிலம் ராஜேந்திர நகர் சட்டசபை தொகுதி, சேவெல்லா லோக்சபா தொகுதியில் வாக்குரிமை இருக்கிறது. அங்கு இன்று நிர்மலா சீதாராமன் தமது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
மோடி மனைவி வாக்களிப்பு
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி ஜோஷ்டாபென் குஜராத்தின் மேக்சனாவில் பகல் 12.39 மணிக்கு வாக்களித்தார்