ராகுலை துணிச்சலாக கடித்த 'பந்தல்காண்ட்' கொசுகளுக்கு வாழ்த்துக்கள்: மோடி
சாகர்: மத்தியபிரதேசத்தில் ராகுல் காந்தியை துணிச்சலாகக் கடித்த கொசுக்களை வாழ்த்துகிறேன் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இதற்கான பிரசாரங்கள் அனல்பறக்கின்றன.
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மிகக் கடுமையான வார்த்தைகளில் பரஸ்பரம் விமர்சித்து வருகின்றனர். அத்துடன் மாறி மாறி தேர்தல் ஆணையத்திடமும் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.
25 ஆயிரம் கொசு கடித்தது- ராகுல் கவலை
இந்நிலையில் கடந்த மாதம், மத்திய பிரதேசத்தின் பந்தல்காண்ட் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 2009-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் பந்தல்கண்ட் பகுதிகளை சுற்றிப்பார்த்தபோது, 25 ஆயிரம் கொசுக்கள் தம்மை கடித்தன என்று கூறியிருந்தார்.
ராகுலை தொடர்ந்து சாடும் மோடி
ஏற்கெனவே ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் தாம் பேசும் இடங்கள் அனைத்திலும் 'இளவரசர்' என்றே பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இந்த கொசுவிவகாரத்தை இதுவரை தொடாமல் இருந்தார்.
ராகுலை கடித்த கொசுக்களுக்கு வாழ்த்துகள்
நேற்று மத்திய பிரதேசத்தின் பந்தல்காண்ட் பகுதியான சாகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் மோடி பங்கேற்றார். விடுவாரா கொசுவிவகாரத்தை.. "இளவரசர் ராகுலை கடிக்க துணிந்த பந்தல்காண்ட் கொசுக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன் என்றார்
நேரு குடும்பம் 100 ஆண்டாக கொசுவால் கடிபடலை
அவர் அப்படி வாழ்த்துவதற்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா? "கடந்த 100 ஆண்டுகளாக ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட கொசுவால் கடிபடவில்லை என்பதாலேயே தாம் பந்தல்காண்ட் கொசுக்களை வாழ்த்துகிறேன்" என்றார்.
எனக்கு வளர்ச்சிதான் முக்கியம்
அத்துடன் வளர்ச்சி விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு நான் தேர்தலில் களமிறங்க விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டுகிறது. வாங்கு வங்கியை அதிகரிப்பதில் மட்டுமே அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள் என்றும் சாடினார் மோடி.