இத்தாலி மாலுமிகள் நாட்டுக்கு செல்ல உதவியது யார்? சோனியாவுக்கு மோடி கேள்வி
இடாநகர்: மீனவர்கள் கொலை வழக்கில் கைதான இத்தாலி நாட்டு மாலுமிகள் தங்கள் நாட்டுக்கு செல்ல உதவியது யார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசுகையில், நாட்டுப்பற்று குறித்து சிலர் தம்பட்டம் அடிக்கின்றனர். மதவாதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இடாநகரில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
தேசப்பற்றைப் பொறுத்தமட்டில் நாட்டு மக்களுக்கு சோனியா நற்சான்றிதழ் வழங்கத் தேவையில்லை. நாட்டின் மீது மக்கள் கொண்ட பற்றுபற்றி அவர் கேள்வி எழுப்பக்கூடாது.
காஷ்மீரில், பாகிஸ்தானியர்களால் இந்திய வீரர்கள் கொல்லப்படுகிறபோதுகூட காங்கிரஸ் பதிலடி கொடுக்க எண்ணியதில்லை. அருணாச்சல பிரதேச வாலிபர் நிதோ தானியா கொடூரமாக டெல்லியில் கொல்லப்பட்டார்.
இத்தகைய சம்பவங்கள் எனக்கு மன வலியை ஏற்படுத்தின. அம்மையார் அவர்களே, கேரளாவில் இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய மாலுமிகள் யாருடைய வழிகாட்டுதலின்பேரில், தங்களுடைய நாட்டுக்கு சென்றனர்? அவர்கள் தங்கள் நாட்டுக்கு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு உதவியாக இருந்தது யார்?
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கடினமான நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால், அந்த மாலுமிகள் இங்கே திரும்பி வந்திருக்க மாட்டார்கள்.
இவ்வாறு மோடி பேசினார்.