இந்தியாவின் புவியியல் அமைப்பையே மாற்றியது காங்கிரஸ்தான்- மோடி
அகமதாபாத்: இந்தியாவின் பிரிவினைக்கு அனுமதி அளித்து நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியதும், நாட்டுக்காகப் பாடுபட்ட முக்கிய தலைவர்களைப் புறக்கணித்து, நேரு குடும்பத்தினரின் புகழ் பாடி வரலாற்றை மாற்றியதும் காங்கிரஸ்தான் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வரலாறு-புவியியலை பாஜக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் குஜராத் மாநிலம் கேடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங், ஹிந்துஸ்தான் மண்ணில் பிறந்தார். தற்போது அது நம்மிடம் இல்லை.

நம் நாட்டின் புவியியலை மாற்றியது யார்? நாட்டைப் பல துண்டுகளாகப் பிரிக்க யார் காரணம்? இந்தியாவை இரண்டாகப் பிரித்தது காங்கிரஸ் கட்சிதான்.
நம் நாட்டுக்கு சொந்தமான பல 100 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் இந்தப் புவியியல் மாற்றத்துக்கு யார் காரணம்? மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய சபர்மதி-தண்டி பாதையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.
6 மாதங்களுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்தப் பாதை 30 கி.மீ. தூரத்திற்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியைக் கைவிட்டுள்ளது. சர்தார் படேலுக்கு 41 ஆண்டுகள் கழித்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
சட்ட மேதை அம்பேத்கருக்கு நாடு சுதந்திரம் பெற்று 33 ஆண்டுகள் கழித்து இவ்விருது வழங்கப்பட்டது. ஆனால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும் அவர்களது வாழ்நாளிலேயே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகியோர் காங்கிரசால் மறக்கடிக்கப்பட்ட தலைவர்கள். நவம்பர் 11ந் தேதி மிகச் சிறந்த கல்வியாளர் அபுல் கலாம் ஆசாத், சுதந்திரப் போராட்ட வீரர் ஜே.பி.கிருபளானி ஆகியோரின் 125வது பிறந்த தினமாகும். இதை காங்கிரஸ் அரசு கொண்டாடவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications