வரலாறு முக்கியமில்லையா முதல்வரே...??
மும்பை: மும்பையில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தொடர்ந்து வரலாற்றைத் தவறாகவே பேசியது அப்பட்டமாக தெரிந்தது. அவருக்கு இன்னும் பயிற்சி தேவை என்று கேலி செய்துள்ளது தேசியவாத காங்கிரஸ்.
மும்பையில் நேற்று பாஜக கூட்டம் நடந்தது. பிரமாண்டமாக நடந்த இந்தக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது அவர் பல புள்ளிவிவரங்கள், தகவல்களைக் கூறினார்.
அதை தேசியவாத காங்கிரஸ் கட்சி கேலி செய்து விமர்சித்துள்ளது இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப்மாலிக் கூறியதாவது...

பலவீன மோடி
மும்பை கூட்டத்தில் மோடி கூறிய சில கருத்துக்களைப் பார்த்தால், அவருக்கு வரலாற்று ஞானம் இன்னும் பலவீனமாகவே இருப்பதை அறியலாம்.

17 பேர்தான்
1960ம் ஆண்டு முதல் இதுவரை மகாராஷ்டிராவில் 17 பேர்தான் முதல்வர்களாக இருந்துள்ளனர். ஆனால் 26 பேர் இருந்ததாக கூறியுள்ளார் மோடி.

இது கூட தெரியாதா மோடிக்கு...
மேலும் மகாராஷ்டிராவில் உள்ளூர் நிர்வாக வரி விதிப்பை எதிர்த்துள்ளார் மோடி. ஆனால், ஆக்ட்ராய் வரி விதிப்பு இல்லாத எல்லா மாநிலங்களிலுமே இந்த வரி விதிப்பு உள்ளது என்பதை அவர் மறந்து விட்டார் போலும்.

குஜராத்துக்குத்தான் காசு பணம் துட்டு.. வரி வரி..
மேலும், மகாராஷ்டிராவிலிருந்து ஏராளமான வாகனங்கள் வட இந்தியாவுக்குச் செல்கின்றன. அனைத்துமே குஜராத் வழியாகத்தான் போகின்றன. இதனால் குஜராத் மாநிலம்தான் அதிக அளவில் மோட்டார் வாகன வரியை வசூலிக்கிறது. அதேசமயம், குஜராத்திலிருந்து குறைந்த வாகனங்களே மகாராஷ்டிராவுக்கு வருகின்றன. ஆனால் இந்த உண்மையை மறைத்து குஜராத்துக்கு சாதகமாக பேசுகிறார் மோடி.

ஷட்டரைத் திறக்க முடியாமல் போனது ஏன்...
சர்தார் சரோவர் அணைக்கான ஷட்டர்களுக்கு அனுமதி தரப்படாததை குற்றம் சாட்டியுள்ளார் மோடி. உண்மையில், மத்தியப் பிரதேச அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காத காரணத்தால்தான் ஷட்டர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் மகாராஷ்டிராவுக்கும் மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டு நாங்கள் தவித்து வருகிறோம்.

கொள்ளையை ஆரம்பித்து விட்டது பாஜக
மும்பை கூட்டத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ரூ. 25 கோடி நிதி கொடுத்துள்ளனர். அதைக் கொடுத்தவர்கள் வைர வியாபாரிகள். இப்போதே கொள்ளையை ஆரம்பித்து விட்டது பாஜக. மும்பை மோடி கூட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தினர் குஜராத்திலிருந்து கூட்டி வரப்பட்டவர்கள்.

பாரதமா.. இந்தியாவா...
மோடி இந்தியாவுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறார். நாங்கள் பாரத்துக்கு ஓட்டு கேட்கிறோம். வரும் தேர்தல் பாரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடக்கும் போராகும் என்றார அவர்.












Click it and Unblock the Notifications