வாரணாசியில் கேஜ்ரிவால் வேட்புமனுத் தாக்கல்! ராகுல், மோடி மீது கடும் தாக்கு!!
வாரணாசி: லோக்சபா தேர்தலில் உ.பி.யின் வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வாரணாசி தொகுதியில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் கேஜ்ரிவால் இன்று தமது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக தமது ஆதரவாளர்களிடையே கேஜ்ரிவால் பேசியதாவது:
எனது பாக்கெட்டில் 500 ரூபாய் பணம் மட்டுமே உள்ளது. தேர்தலில் பலப்பரீட்சை நடத்த கூட என்னிடம் பணமில்லை. இந்த பழைய ஜீப்பில் சென்றே வேட்பு மனுவை தாக்கல் செய்கிறேன்.
இங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள மோடி ஹெலிகாப்டரில் வருவார். அவ்வாறு வருபவரிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவரை ஹெலிகாப்டரில் மட்டும் தான் பார்க்க முடியும்
கடந்த சில நாட்களாக காசி மக்களுடன் தங்கி இருந்ததில் அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டேன்.மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக காந்தி குடும்பத்திற்கு வாக்களித்து எந்த பயனையும் பெறவில்லை.
எனக்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் தேவை. ஊழலுக்கு எதிரான வாரணாசி தொகுதி மக்களின் போராட்டம் இது. அமேதி மக்கள் தங்கள் தொகுதிக்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ராகுல் காந்திக்கு வாக்களித்தனர்.
ஆனால் அவர்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அமேதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. உயரப் பறக்கும் ஹெலிகாப்டரை காண்பித்து உங்கள் தலைவர் அதோ செல்கிறார் என கைகாட்டுகின்றனர்.
அந்த நிலைமை வாரணாசி மக்களுக்கும் வந்துவிடக்கூடாது. "ஹெலிகாப்டர் ஜனநாயகம்" வேண்டுமா இல்லை "மக்கள் பிரதிநிதி நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிபவராக இருக்க வேண்டுமா" என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் விளம்பரங்களுக்காக கோடிக் கணக்கில் பணம் செலவழிக்கின்றனர்.
மோடி, விளம்பரங்களுக்கு ரூ.5000 கோடி செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எங்கு திரும்பினாலும் மோடி, ராகுல் விளம்பரங்கள் தான் உள்ளன.
மோடி, ஆட்சிக்கு வந்தால் அவர் ரூ.5 லட்சம் கோடியாவது சம்பாதிப்பார். ஆனால் என்னிடம் பணம் இல்லை. இனி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் யாரை தேர்ந்தெடுப்பது என்று.
இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.












Click it and Unblock the Notifications