தாவூத்தை கையோடு இந்தியா அழைத்துவர ஷெரீப்புக்கு சொல்லுங்கள்: மோடிக்கு காங். கோரிக்கை
டெல்லி: தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம், கையோடு தாவூத் இப்ராஹிமையும் அழைத்து வருமாறு நரேந்திரமோடி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜே.பி.அகர்வால் தெரிவித்தார்.
நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமராக 26ம்தேதி பதவியேற்க உள்ள நிலையில், அதில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்களுக்கு இந்தியா சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வருவது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின், மூத்த தலைவர் ஜே.பி.அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நவாஷ் ஷெரீப்பை இந்தியா வருமாறு அழைத்துள்ள மோடி, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமையும் அழைத்துவருமாறு கூற வேண்டும். அது மட்டுமல்லாது, இந்திய ராணுவ வீரர்கள் தலையை வெட்டிய பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் அழைத்துவர வேண்டும் என கூறவேண்டும்.
பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பாகிஸ்தான் விஷயத்தில் காங்கிரஸ் மென்மையாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியது. ஆனால் தற்போது மோடி தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு வகித்த நிலைப்பாட்டில் இருந்து மொத்தமாக அவரால் எப்படி மாற முடிந்தது.
இவ்வாறு அகர்வால் கூறினார்.












Click it and Unblock the Notifications