பாட்னாவில் மோடி கூட்டம்- 11 சிறப்பு ரயில்கள்; 3 ஆயிரம் பேருந்துகள்!
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 27-ந் தேதி நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்காக 11 சிறப்பு ரயில்கள், 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடனான 17 ஆண்டு கால உறவு முடிவுக்கு வந்துள்ள நிலையில் அக்கட்சி ஆளும் பீகார் தலைநகர் பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி 27-ந் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் இப் பொதுக்கூட்டத்தை, ஐக்கிய ஜனதாதளம் கட்சிதலைவர் நிதிஷ் குமாரின் சொந்த மண்ணில், மோடியின் செல்வாக்கை எடுத்துக்காட்டுவதற்கு ஓரு வாய்ப்பாக பயன்படுத்த பாஜக முனைப்பு காட்டுகிறது.

இக் கூட்டத்துக்காக 11 சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. அத்துடன் 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் 91 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்கள், நிர்வாகிகள் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டத்தில் மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ள அழைப்பு விடுத்து ஆதரவு திரட்டுகின்றனர்.
பாட்னா பொதுக்கூட்டத்துக்கு முந்தைய நாள் 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடக்கிற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.












Click it and Unblock the Notifications