நேபாளம் சென்றார் மோடி... இரு நாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன
டெல்லி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று நேபாளம் நாட்டுக்கு சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு அந்நாட்டு பிரதமரைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு உறவுகள் மேம்பாடு குறித்து பேசுகிறார். பொருளாதாரம், மின்சாரம் மற்றும் பண்பாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறார்.
கடந்த மே மாதம் 26ம் தேதி நடந்த மோடியின் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டர். அப்போது பேசிய மோடி, சார்க் நாடுகளின் உறவுகள் மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, மோடி தனது முதல் பயணமாக பூடான் நாட்டுக்கு சென்றார். அடுத்ததாக இன்று நேபாளத்துக்கு சென்றுள்ளார்.

3வது பிரதமர்...
இதற்கு முன்னர் கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்றார். 2002-ம் ஆண்டு நேபாளத்தில் நடந்த ‘சார்க்' நாடுகளின் உச்சிமாநாட்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பங்கேற்றார். இவர்களைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுமுறை செல்லும் இந்தியப் பிரதமர் என்ற சிறப்பைப் பெறுகிறார் மோடி.

நேபாள பயணம்....
கடந்த வாரம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேபாளம் சென்று திரும்பினார். அப்போதே பிரதமர் மோடியின் நேபாள பயணம் உறுதி செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தை...
அதன் தொடர்ச்சியாக இன்று நேபாளம் சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, பொருளாதாரம், மின்சாரம் மற்றும் பண்பாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

சிறப்புரை...
பின்னர், நேபாள நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தில் மோடி சிறப்புரை நிகழ்த்துகிறார். இதன்மூலம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 2-வது வெளிநாட்டு தலைவர் மோடி ஆவார். இதற்கு முன்பு 1990-ல் ஜெர்மனி அதிபர் ஹெல்மட் கோலுக்கு இந்த கவுரவம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆலய தரிசனம்...
வேதவித்யாஸ்ரம இளம் சீடர்கள் 108 பேர் வரவேற்க நாளை தலைநகர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பசுபதிநாதர் (சிவாலயம்) கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார் மோடி.

கோவில் புனரமைப்பு பணி...
இந்த கோவில் புனரமைப்பு பணிகளுக்காக இந்தியா சார்பில் ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகளும் வழங்கப்பட உள்ளது. கோவில் அருகில், பக்தர்கள் தங்குவதற்காக 400 அறைகள் கொண்ட விடுதியும் இந்தியா சார்பில் கட்டப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications