சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் நரேஷ் அகர்வால் பாஜகவில் இணைந்தார்!
சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் நரேஷ் அகர்வால் பாஜகவில் இணைந்து இருக்கிறார்.
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜ்ய சபா எம்.பியுமான நரேஷ் அகர்வால், அந்த கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் பதவியில் இருந்தும் விலகி இருக்கிறார்.
சமாஜ்வாதி கட்சியின் முக்கியமான தலைவர்களில் நரேஷ் அகர்வாலும் ஒருவர். இவருக்கும் சமாஜ் வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவிற்கும் நீண்ட நாட்களாகவே பிரச்சனை இருந்து வந்தது. ஆனால் அகிலேஷ் யாதவுடன் நல்ல நிலையிலேயே உறவை பேணி வந்தார்.
இந்த நிலையில் ராஜ்ய சபா உறுப்பினராக சமாஜ்வாதி கட்சி சார்பாக அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் தேர்வு செய்யப்பட இருப்பதாக அந்த கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இது நரேஷ் அகர்வாலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நரேஷ் தற்போது கட்சியில் இருந்து விலகி இருக்கிறது. அவரது மகனும் சமாஜ்வாதி கட்சியில் எம்.எல்.ஏவாக இருக்கும் நிதினும் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேட்டி அளிக்கும் போது ''சமாஜ் வாதி கட்சி மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இப்போதும் நான் முலாயமை மதிக்கிறேன். பிரதமர் மோடியும், அமித்ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் என்னை அதிகம் கவர்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் பாஜகவில் சேர்ந்தேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.