ராஜீவ்காந்தி 25வது நினைவுநாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமான காங்கிரசார் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர பூமியில், அவரது மனைவியும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, மகன் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21ம் தேதி, ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீ பெரும்புதூரில் சர்வமத பிரார்த்தனை, மோட்சசாந்தி பூஜை, சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாங்காடு முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி குழுவினரின் இலவச மருத்துவ முகாம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரசார் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தினம் என்பதால், தமிழகம் முழுவதும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் டாக்டர் P.சந்திரமோகன் தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு பிரபாகர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மாவட்ட ஆட்சியர் திரு.சத்யப்பிரதாசாகு உறுதிமொழி வாசிக்க, அதனை அனைத்து ஊழியர்களும் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
புதுச்சேரி தலைமைச் செயலக வளாகத்தில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications