நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலை ஐடி அதிகாரிகள் விசாரிக்க கோர்ட் அனுமதி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தியை விசாரிக்க வருமான வரித்துறையினருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: யங் இந்தியா பத்திரிகையின் சொத்துகள் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இதை நடத்தி வந்தது அசோசியேட்டட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம்.

சோனியா, ராகுல்
இந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் வாங்கியது, இதில் இருவருக்கும் தலா 38% பங்குகள் உள்ளன.

சு.சுவாமி
அசோசியேட்டட் ஜர்னல்ஸ் சொத்துகளை யங் இந்தியா வாங்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்பது பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வருகிறது.

ஐடி மனு
இதனிடையே யங் இந்தியா சொத்துகள் தொடர்பாக சோனியா, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்தனர்.

அனுமதி
இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சோனியா, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications