மும்பையில் கருப்பு உடையில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாட்டம்... உச்சகட்ட உஷார் நிலையில் கடற்படை!
மும்பை: ஆயுதங்களுடன் மும்பை உரான் கடற்படை தளம் அருகே மர்ம நபர்கள் நடமாடியதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மும்பையில் கடற்படையினர் உச்சகட்ட உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து ராணுவ முகாம்களும் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
மர்ம மனிதர்கள்...
இந்த நிலையில் மும்பை கடற்படை தளம் வெடிமருந்து கிடங்கு அருகே கருப்பு உடை தரித்த ஆயுதம் தாங்கிய 5 அல்லது 6 மர்ம மனிதர்கள் நடமாடியதாக பள்ளி மாணவர்கள் 2 பேர் பள்ளிக்கூட நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.
ஓஎன்ஜிசி, ஸ்கூல்
அந்த மர்ம மனிதர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றை பேசியதாகவும் ஓஎன்ஜிசி, ஸ்கூல் என்ற வார்த்தைகளையே திரும்ப திரும்ப கூறியதாகவும் அம்மாணவர்கள் கூறினர். இது குறித்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது.
உச்சகட்ட உஷார்
இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படை ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரான் கடற்படை தளப் பகுதியில் அங்குலம் அங்குலமாக தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மீண்டும் 2008 தாக்குதல்?
2008-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக மும்பைக்குள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 166 பேர் பலியாகினர். அதுபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்தத்தான் அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக ஊடுருவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வன பாதுகாவலர்கள்?
இதனிடையே மாணவர்கள் பார்த்தது தீவிரவாதிகள் அல்ல.. வன பாதுகாவலர்கள்... அவர்கள்தான் ரோந்து செல்லும் போது பச்சை நிறை சீருடை அணிந்து ஆயுதங்களுடன் செல்வார்கள். அவர்களைப் பார்த்துதான் மாணவர்கள் தீவிரவாதிகள் என கூறியிருக்கக் கூடும் என மகாராஷ்டிரா மாநில உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.