மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பு: பாக். பிரதமர் அலுவலகம்
டெல்லி: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பார் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் நாளை மறுநாள் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த விழாவுக்கு சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
7 நாடுகளின் தலைவர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்தனர் .ஆனால் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எந்த முடிவையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பதை அந்நாட்டு ராணுவம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்றால் மதவாத சக்திகள் ஆத்திரமடைவார்கள் என்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கூறி வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி, மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.