பாகிஸ்தானுக்கு வாருங்கள்... கடிதம் மூலம் நவாஸ் ஷெரீப் அழைப்பு: மன்மோகன் சிங் ஏற்பு
டெல்லி: பாகிஸ்தானுக்கு வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது கடிதத்தை மன்மோகன் சிங்கிடம் அளித்த பாகிஸ்தான் குழுவினர், நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் உள்ளிட்ட பாகிஸ்தான் குழுவினர், நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்.
அந்தச் சந்திப்பின் போது, ‘பாகிஸ்தானுக்கு வருமாறு மன்மோகன்சிங்குக்கு நவாஸ் ஷெரீப் முறைப்படி அழைப்பு விடுத்த கடிதத்தையும், நல்லெண்ண செய்தியையும் மன்மோகன்சிங்கிடம் வழங்கினார் பாகிஸ்தான் குழுவில் இருந்த நவாஸ் ஷெரீப்பின் விசேஷ உதவியாளர் தாரிக் பதேமி.
அதன் பின்னர், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஷாபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.