இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு சீன கும்பல் ஆயுத கடத்தல்!

கேரளாவின் வயநாட்டில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தலை தூக்கியுள்ளனர். அப்பகுதியில் கேரளா காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதன் மூலம் 1960-70களுக்குப் பின்னர் இடதுசாரி தீவிரவாதிகள் கேரளாவில் மீண்டும் காலூன்ற தொடங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் கேரளாவுக்குள் தளம் அமைக்க முயற்சிக்கலாம் என்று உளவுத்துறையினர் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர். கேரளா ஏற்கெனவே இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறது என்று கூறப்படும் நிலையில் தற்போது உளவுத்துறை எச்சரித்தபடியே மாவோயிஸ்டுகளும் அம்மாநிலத்தில் தளம் அமைத்துள்ளனர்.
நமது ஒன் இந்தியாவுக்கு கிடைத்த தகவல்களின்படி மாவோயிஸ்டுகளிடம் அதிநவீன ஆயுதங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ஆயுதங்கள் தமிழகத்தின் கேட்பாரற்ற துறைமுகங்கள் வழியாகத்தான் கேரளாவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கைமாறுகிறது என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரின் அறிக்கையின்படி, கோடியக்கரை துறைமுகம்தான் இந்த ஆயுதக் கடத்தலின் மையமாக இருக்கிறது. இங்கிருந்தே கேரளாவின் வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதில் சீனா நாட்டின் கடத்தல் கும்பலின் பங்குதான் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் சீனா நாட்டைச் சேர்ந்த ஆயுத கடத்தல் கும்பல்தான் இதன் பின்னணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இக்கடத்தலில் இருநாட்டைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு கோடியக்கரை கடற்கரையில் ஓபியம் என்ற போதை மருந்தை கொடுத்துவிட்டு பீடிகளை இலங்கைக்கு வாங்கிச் சென்ற கடத்தல் சம்பவங்கள் நடந்தேறின. தற்போது ஓபியம், பீடிகளுக்குப் பதிலாக பெருமளவு ஆயுதங்கள் கடத்தும் தளமாக கோடியக்கரை உருவெடுத்திருக்கிறது. இந்த ஆயுதக் கடத்தலுடன் பெருமளவு பணமும் இலங்கையில் இருந்து கோடியக்கரை மூலமாக இந்தியாவுக்குள் கடத்தப்பட்டு வருகிறது என்கின்றன உளவுத்துறை தகவல்கள்.
இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள், மாவோயிஸ்டுகளை அரசியல் லாபங்களுக்காகவும் அரசியல் சக்திகள் பயன்படுத்துகின்றன. கேரளாவின் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் படுகொலையில் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது வடகேரளா வனப் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளா காவல்துறையின் தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலப்புரம், கண்ணூர், அட்டப்பாடி மற்றும் கோழிக்கோடு என இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் ஊடுருவியிருக்கும் பகுதிகளில்தான் மாவோயிஸ்டுகளும் தளம் அமைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மாவோயிஸ்டுகள் இயக்கத்தைச் சேர்ந்த 40 பேர் அடங்கிய ஹிட் லிஸ்ட்டை கேரளா போலீசார் தயாரித்துள்ளனர். இவர்கள் அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவின் தலைவர்களாக என். சுப்பிரமணியம், பி. பவுரன் மற்றும் போபி தாமஸ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரளா உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலாவும், மாவோயிஸ்டுகளை ஒடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கர்நாடகா, தமிழக மாநிலங்களின் ஒத்துழைப்பை நாடியிருப்பதாகவும் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications