பீகாரில் பாஜகவிற்கு நல்ல அறுவடை!… மண்ணைக் கவ்வும் நிதீஷ்குமார்?
பாட்னா: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் ராம்விலாஸ் பஸ்வானுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக அதிக தொகுதிகளை அறுவடை செய்யும் என்று என்.டி.டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
கடந்த 17 ஆண்டுகாலமாக பாஜக உடன் கூட்டணி வைத்திருந்து கடந்த ஆண்டு வெளியேறிய நிதிஷ்குமார் பெரும்பாலான தொகுதிகளை இழக்க நேரிடும் என்று அந்த கருத்துக்கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.
பீகார் மாநிலத்தில் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. பாஜக உடன் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

ஆளும் கட்சிக்கு அடி
ஆளும் கட்சியாக இருந்தாலும் பாஜக கூட்டணியின்றி தனித்து தேர்தலை சந்திக்கும் நிதிஷ்குமார் 5 தொகுதிகள் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இது கடந்த தேர்தலோடு ஒப்பிடும் போது 15 தொகுதிகள் குறைவாகும்.

பாஜகவின் அறுவடை
அதே சமயம் பாஜக - லோக் ஜனசக்தி கூட்டணிக்கு 23 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது இது கடந்த 2009 பொதுத்தேர்தலைக் காட்டிலும் 11 தொகுதிகள் அதிகம்.

லாலு கட்சி கூட்டணி
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துள்ள லாலு பிரசாத் யாதவ் 11 தொகுதிகளை கைப்பற்றுவார் என்கிறது அந்த கருத்துக்கணிப்பு இது கடந்த தேர்தலை விட 5 தொகுதிகள் கூடுதல் என்று கூறப்படுகிறது.

உதிரிக்கட்சிகள்
பிற கட்சிகள் ஒரு தொகுதியை கைப்பற்றுமாம். இந்த கருத்துக்கணிப்பின் மூலம் ஆளும் கட்சிக்கு பீகாரில் பலத்த அடி காத்திருக்கிறது என்கின்றனர்.

பிரதமர் வேட்பாளர்
குஜராத் கலவரத்தின் போது நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்களைக் காக்கத் தவறிய மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். இதன் மூலம் அவர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்று தெரிவிக்கிறது இந்த கருத்துக்கணிப்பு.












Click it and Unblock the Notifications