தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு இல்லை: செப்.4க்குள் கவுன்சலிங்- சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு
டெல்லி: தமிழகத்தில் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 4ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து இவ்வாண்டு மட்டும் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு மத்திய அரசின் அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்திருந்தன.
இந்த நிலையில், சிபிஎஸ்இ மாணவர்களோ, நீட் அடிப்படையில்தான் தேர்வு நடைபெற வேண்டும் என கோரினர். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் அடிப்படையில்தான் தமிழகம் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும், செப்டம்பர் 4ம் தேதிக்குள் கவுன்சலிங்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் என்ற ஒரு மாநிலத்திற்காக மட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு தர முடியாது என மத்திய அரசு சார்பில் இன்று வாதம் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தககது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதால் தமிழக பாடத் திட்டத்தில் படித்து நீட் குறித்து பயிற்சி பெற்றிராத, ஏழை, எளிய மாணவர், மாணவியரின் டாக்டர் கனவு தகர்ந்தது.