நீட் அராஜகம்: 18 வயது பருவ பெண்ணின் உள்ளாடையை அகற்றக் கூறுவதா?.. கொந்தளித்த தாய்
நீட் தேர்வுக்குச் சென்ற 18 வயது பெண்ணின் உள்ளாடையை அகற்ற சொன்னது என்ன நியாயம் என்று கேரள மாணவியின் தாய் கொந்தளித்துள்ளார்.
கன்னூர்: நீட் தேர்வுக்குச் சென்ற 18 வயது பருவ பெண்ணின் உள்ளாடையை அகற்ற சொல்வது என்ன நியாயம் என்று கேரள மாணவியின் தாய் கொந்தளித்தார்.
நீட் தேர்வு நடத்தப்பட்டால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.
எனினும் வழக்கம்போல் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வை நேற்று நடத்தியது. ஆனால் இதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
தோடு, கொலுசு, மூக்குத்தி கூடாது
மூக்குத்தி, கொலுசு, தோடு உள்ளிட்ட அணிகலன்கள் அணியக் கூடாது, உலோகத்தால் ஆன பட்டன்கள், பெரிய பூக்கள் கொண்ட ஆடைகளை அணியக் கூடாது, முழுக்கை சட்டை அணியக் கூடாது, செல்போன், வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது. கையில் கருப்பு கயிறு உள்ளிட்டவை அணியக் கூடாது என்று ஏகத்துக்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மாணவர்கள் அவதி பெற்றனர்.
டார்க் கலர் பேன்ட் கூடாது
இந்நிலையில் கேரள மாநிலம் கன்னூரில் நடந்த தேர்வில் மாணவி ஒருவர் டார்க் நிற பேன்ட் அணிருந்திருந்தார். அவரை தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்காததால் 2 கி.மீ. தூரம் சென்று கடைகளில் அலைந்து திரிந்து வேறு பேன்ட் மாற்றிக் கொண்டு சென்றார். அப்போது தேர்வு தொடங்க 10 நிமிடங்களுக்கு முன்னர் மெட்டல் டிடெக்டரால் சோதனை செய்யப்பட்டதால் பீப் ஒலி வந்தது.
உள்ளாடையில் உள்ள ஸ்டிராப்
தான் அணிந்திருக்கும் உள்ளாடையில் மெட்டல் ஸ்டிராப் உள்ளதால் பீப் ஒலிப்பதாக அந்த மாணவி கூறியும் அதிகாரிகள் கேட்கவில்லை. அவரை வேறு ஒரு அறைக்கு சென்று உள்ளாடையே கழட்டி வைத்து விட கூறினர். உள்ளாடைகளில் மெட்டல் பொருள்கள் இருக்கக் கூடாது என்று மத்திய அரசு விதிகளில் இல்லையே என்று அந்த பெண் கேட்டும் பயனில்லை.
அம்மாவிடம்...
வேறு வழியில்லாததால், மறைவான அறைக்கு சென்று தன் உள்ளாடையை கழற்றி வெளியே உள்ள அம்மாவிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார். இருந்தாலும் இந்த கேவலமான டார்ச்சரால் அப்பெண்ணுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் கூறுகையில், 18 வயது பெண்ணின் உள்ளாடையை அவர்கள் எப்படி அகற்ற சொல்லலாம்?
மன உளைச்சல்
தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை உள்ளாடையை அகற்றக் கூறினால் அவரது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை இந்த அதிகாரிகள் உணராதது ஏன்? மருத்துவ படிப்பு கனவில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது விருப்பமில்லாத ஒன்றாக உள்ள நிலையில் இதுபோல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதே பல மாணவிகளின் உள்ளாடைகளையும் அகற்ற கூறினர் என்றார் அவர்.
விபரீதம்
தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் இதுபோன்ற உள்ளாடைகளை அகற்றுமாறு மாணவிகளை அனுப்புவதால் அங்கு யாரேனும் மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்தால் நிலை என்னவாகும்? யாரோ என்ன? பள்ளி நிர்வாகத்தின் அடிமட்ட ஊழியரே இதுபோல் செய்தால் மாணவிகளின் நிலை என்னவாகும் என்பதை அறியாமல் பெண் பாதுகாப்பு குறித்து பேசுவதில் என்ன பயன்?